Skip to content

கேதரீனின் வசந்தகாலம் – ஆன் எபெர்

வசந்த கால உழவு, வசந்த கால விதைப்பு, காற்று, மலர்கள், பரிச்சயமான பறவைகள்… வழக்கமான வசந்தத்துக்காக நாங்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்தோம். கொஞ்சம் மழை அல்லது அதிக மழை, வெவ்வேறு விதமாக ஒளிரும் சூரியன், ஆனால் மாற்றமில்லாத நிலம், அனேகமாக ஒரே அளவில் பரிச்சயமான பயிர்கள்… ஆனால் விதைகளை நாசமாக்கி, உமியை விதைத்து, எங்களுடைய வழமையான ஏர்ப்பாதையை மாற்ற வந்தான் பகைவன். விலை உயர்ந்த, எங்களுக்குப் பிரியமான பொருட்களெல்லாம் மரம் எரிவது போல் கேவலமாக எரிந்து போயின.

வழியில் அவர்கள் இருமருங்கிலும் இருக்கும் மரங்களுக்கு, கிராமங்களுக்கு, காடுகளுக்கு, நகரங்களுக்கு ஒவ்வொன்றாகத் தீ வைத்தனர். நெருப்பில் படபடக்கும் மரங்களும், கற்களும், அவற்றிலிருந்து வரும் கரும் புகையும், மெழுகின் மென்மை இல்லாத இந்த பயங்கர மெழுகுவர்த்தியை எந்தக் கடவுளுக்காக ஏற்றினர்? இதில் நாம் எந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்க வந்திருக்கிறோம்?  நாமும் தீயில் உருகி நெருப்புத் துகள்களாக வானத்தை நோக்கிச் செல்ல வேண்டுமா? நம்மில், நமது குழந்தைகளில், நமது வேலையில், நம் உழைப்பின் எல்லாப் பயன்பாடுகளிலும் என்ன மிஞ்சும்? குருத்திலேயே தங்கி விடுமா, பழுக்குமா அல்லது அழுகுமா? தீர்ப்பளிக்கவோ தேர்ந்தெடுக்கவோ எந்த உரிமையும் இல்லை. தேசம் முழுவதும் தீக்குளிக்க வேண்டுமா? நமது கிறிஸ்துவக் கடவுள் தூங்கி விட்டாரா? இந்த நெருப்பும் ரத்தமுமாக இருக்கும் ஆட்சியிலிருந்து நம்மை மீட்க கிராமத்தில் இருந்து யாராவது ஃபகீர் வர வேண்டுமா? தியாகத்திற்கு ஏதாவது பலன் இருக்க வேண்டுமானால் வாழ்வின் துடிப்பு உயிர்ப்புடன் இருக்க வேண்டும்; ஏனென்றால் அந்தக் காயங்கள் ஆறும் போது உயிரின் துடிப்பு திரும்பவும் சீறிக் கொண்டு பாயும்.  ஆனால் எங்கள் வசந்த காலத்தை வன்முறையால் கொடூரமாக அழித்த இந்த பயங்கரத்தில் என்ன தீர்வை எதிர்பார்க்க முடியும்? முன்பு பூத்துக் குலுங்கும் ஆப்பிள் மரங்கள், பீச், ப்ளம் ஆகிய மரங்களின் நறுமணத்தைச் சுமந்து வந்த காற்று இப்போது வன்முறையின் வித்துக்களை சுமந்து கொண்டு வருகிறது. நமது அன்றாட வாழ்வின் மெதுவான நடைமுறைகளில் சடாரென பீறிட்டுப் பாயும் பயம், கோழைத்தனம், இயலாமை, வெறுப்பு எல்லாம் நமக்குள் உருவாகிக் கொண்டு வருகிறது.

நம்மிடையே சில பேர் கண்களை மூடிக் கொண்டு வாழ்க்கையின் அன்றாட காரியங்களைத் தவிர வேறு எதுவும் நடக்காதது போலவும், இனி வர இருக்கும் மாற்றங்களை இந்தக் காலாவதியான அன்றாட காரியங்கள்தான் விரட்டிக் கொண்டிருப்பது போலவும்  பிடிவாதமாக இருந்தனர். வலுக்கட்டாயமாக மக்கள் கடந்த காலத்தைப் பிடித்து வைத்துக் கொள்ள நினைத்தனர். ஆண்கள் வயல் வேலைகளில் மூழ்கியிருந்தனர். வந்திருக்கும் வசந்த காலத்தை மட்டுமே அவர்கள் பார்க்க விரும்பினர்; தங்கள் வாழ்வின் மீது படிந்து விட்ட கொடும் பருவத்தை அவர்கள் காண விரும்பவில்லை. வருடத்தின் இந்தப் பருவத்தில் வழிவழியாக செய்து வந்த துப்புரவுப் பணிகளில் பெண்கள் ஈடுபட்டனர். இந்தத் துப்புரவுப் பணிகளால் பளபளப்பாகி விட்ட வீடுகள்  போரின் கொடுமைகளை வென்று  விட முடியும் என்று நம்புகிறார்களா என்ன?

எதுவும் நடக்காதது போல வயதான ஜான் தன் நிலத்தை உழுதார். அவர் மனைவி ஸோஃபி ’அந்த நிலத்தைப் புதிதாக உழுது என்ன பயன்?’ என்று புலம்பிக் கொண்டிருந்ததை அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை. வேலை செய்து செய்து காப்புக் காய்ச்சிப் போயிருந்த கைகள் இனிமேல் உபயோகப்படாது எனத் தெரிந்து போயிற்று. இத்தனை நாட்கள் வேலை செய்து அனுபவம் பெற்ற கைகள் உபயோகம் இல்லாமல் போயிற்று. முதல் முறையாக ஸோஃபியின் கைகள் தங்களின் தோல்வியைக் கண்டன; ஸோஃபியின் கைகள் உபயோகமற்றவையாக, தோல்வியடைந்தவையாகத் தீர்ப்பளிக்கப்பட்டன. ஸோஃபி கருப்பு உடையின் மேல் விரிந்திருந்த தன் மறுதலிக்கப்பட்ட  கைகளைப் பார்த்தாள். அவள் உடுத்தியிருக்கும் அந்தக் கருப்பு உடையை ஞாயிற்றுக்கிழமைகளிலும் சில குறிப்பிட்ட நாட்களிலும்தான் உடுத்துவது வழக்கம்; அது சந்தோஷமான நாளாக இருந்தாலும் சரி, துக்க நாளாக இருந்தாலும் சரி. தொன்று தொட்டு பழக்கத்தில் இருந்து வரும் துக்ககரமான நாளை அறிவிக்கும் இந்தக் கருப்பு உடையும் வெள்ளைத் தொப்பியும், இப்போதெல்லாம் எப்போதும் அணியும் உடையாக மாறிப் போனது.  

குருட்டு நம்பிக்கையுடனும் விடாப்பிடியான மன உறுதியுடனும் அந்த ஊரில் இருந்தது நிச்சயமாக மேடம் பிஷோன் தான். அவர் எல்லா நாற்காலிகளுக்கும் உறை அணிவித்துக் கொண்டு இருந்தார். வேலைக்காரி போன பின் அவரே மெதுவாகவும் கச்சிதமாகவும் நாஃப்தலீன் உருண்டைகளை எங்கு வேண்டுமோ அங்கு வைத்தார். விதவிதமான மோதிரங்களை அணிந்த அவருடைய பருத்த கைகள் கணக்கை சரி பார்த்தது; பின்னர் குழாயை, ஒயின் அலமாரியை, பறவைக் கூண்டை, ஜாம் பாட்டிலின் லேபிளை சரி பார்த்தது. அவர் சாவிக் கொத்தை எடுத்துக் கொண்டே மரத்திலான ஜன்னல் மறைப்பைக் கீழே இழுத்தார்; ஜெரானியத்திற்குத் தண்ணீர் ஊற்றினார்.

அவருடைய கணவர் சிறிது கனைத்துக் கொண்டு மூக்குக் கண்ணாடியை துடைத்துக் கொண்டே, ‘யுலாலீ, தாமதிக்காமல் உடனே கிளம்ப வேண்டும், இப்போதே…’ என்று கூறியதும் மேடம் பிஷோன் தலையைத் தூக்கிப் பார்த்தார். வருடத்திற்கு ஒரு முறை விடுமுறையில் சுற்றுலா செல்லும் போது எப்படி எல்லா விஷயங்களும் ஒழுங்காக இருக்கிறதா என்று சோதிப்பாரோ அப்படியே ஒவ்வொன்றையும் பார்த்தார். அந்த வீட்டுத் தலைவியின் மூளைக்குள் எல்லா வீட்டுச் சாமான்களும் எல்லா வீட்டுப் பொருட்களும் வரிசைக் கிரமமாக பதிந்தன. இந்தப் பயணம் இதுவரை அவர் செய்த பயணங்களில் இருந்து மாறுபட்டது என்பதற்கான அறிகுறி எதுவும் அவரிடம் இல்லை. பின்னர் ஒருநாள் தன் வீடு அழிக்கப்பட்டு சூறையாடப்பட்டது எனத் தெரிய வந்த போது தான் தன்னுடைய ஆழ்மனதில் இருக்கும் அப்பொருட்களுக்கு -மரச்சாமான்கள், அறைகள், சுவர்க் காகிதங்கள், சரிகை திரைச்சீலைகள், க்ரோஷே படுக்கை விரிப்புகள், குடும்பப் படங்கள் என எல்லாவற்றிற்கும் விடை கொடுத்தார். (அவருடைய நினைவில் ஒரு சிறிய பொருள் கூட தப்பவில்லை; ஒரு கண்ணாடி உறையினுள் வைத்திருந்த அவர் கல்யாணத்தின் போது அணிந்திருந்த தலைக்கிரீடம், போரில் கொல்லப்பட்ட தன் மகனின் சட்டம் போட்டு சுவற்றில் மாட்டி வைத்திருந்த பட்டப்படிப்பு சான்றிதழ் உட்பட).

ஃபார்மஸிஸ்ட் வெள்ளை கோட்டில், புருவத்தை சுருக்கியபடி தன் வேலையைச் செய்து கொண்டிருந்தார். அவருக்குப் பழைய சடங்குகளின் சக்தி மீது நம்பிக்கை இல்லை.  அவை காலாவதியாகி வெகு நாட்களாகி விட்டன. அவர் பூர்த்தி செய்ய இயலாத கோரிக்கைகள் நிறைந்த புதிய காலகட்டத்தில் வாழ்ந்து வந்தார். எல்லாத் திசைகளிலிருந்தும் வரும் காயமடைந்தவர்களுக்குப் போதுமான மருந்தோ, களிம்போ, பேண்டேஜோ அவரிடத்தில் இல்லை. இரவும் பகலும் அயராது வேலை செய்து அலமாரிகளை காலி செய்து கொண்டு இருந்தார். அவருடைய பள்ளி செல்லும் சின்னப் பெண், கடினமான உழைப்பை இதுவரை பார்த்திராத தன் பிஞ்சு விரல்களால் பேண்டேஜுகளை தயார் செய்து கொண்டிருந்தாள். 

உள்ளூரிலும் வெளியூரிலும் இருந்து வரும் காயமடைந்தவர்களுக்கு வெள்ளை  பேண்டேஜ் காத்துக் கொண்டிருந்தது. ஃபார்மஸிஸ்டின் சின்னப் பெண்ணும், அங்கிருந்த நர்ஸுகளும் படுக்கை விரிப்பு, திரைச்சீலை, மேஜைத் துணி, அங்கிருந்த பாதிரியாரின் அங்கி என எல்லாவற்றையும் நீள பட்டியாகக் கிழித்தனர். வெள்ளைத் துணி கிராமத்தில் எங்குமே கிடைக்காமல் போன போது , பாதிரியார் பிரார்த்தனைத் துணியை எடுத்துக் கிழித்துக் கொடுத்தார்…

எங்களிடையே சிலபேர் தங்களுடைய பலமின்மை காரணமாக இன்னும் புறப்படாமல் இருந்தனர். ஆனால் வேறு வழியில்லை; புறப்படத்தான் வேண்டும். ஏனென்றால் பகைவன் இன்று இரவுக்குள் ஊர் வந்தடைந்து விடுவான். இவ்வளவு வருடங்களாக கல்வீடுகள் தங்கள் நிழலுக்குள் பதுக்கி வைத்திருந்த மனிதர்கள் வெளியே வரத்தான் வேண்டும். மருத்துவர்களிடமும், ஃபார்மஸிஸ்டுகளிடமும் வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தங்கள் வலியைப் போக்க மருந்து கேட்டனர். தங்களுடைய வலி கண்ணியமாக, அவர்கள் வலிமையாக இருக்க வேண்டுமென விரும்பினர்; சோகமான ஆந்தைக்  கண்களைப் படபடக்க வைக்கும் வலிமையான சூரிய வெளிச்சத்தின் முன் கண்களைச் சுருக்கிக் கொண்டு நிற்க அவர்கள் விரும்பவில்லை. 

தண்ணீர்த் தொட்டியைப் போல அந்த ஊர் காலியாகி மறுபடியும் நிறைந்து கொண்டிருந்தது. வேறு ஊர்க்காரர்கள் எங்களுடன் ஒன்றாகக் கலந்தனர். குண்டு வெடித்த அன்று  வாடகை நிறைய வாங்கிய அந்தப் பெண்மணி நடத்தும் பிஸ்த்ரோவில் கூட ஆட்கள் இருந்தனர். 

அந்தப் பெண்மணியிடம் கேதரீன் என்ற பணிப்பெண் இருந்தாள். (அவளை உண்ணிப் பூச்சி என்று நாங்கள் அழைப்போம்.) அந்த பிஸ்த்ரோவில் கீழே ஆட்கள் நிறைந்து இருந்ததால் மேலே இருக்கும் அவளுடைய சிறிய அறையை கேதரீன் புதிதாக வந்த நதாலியுடன் பகிர்ந்து கொள்ள நேர்ந்தது. நதாலி பகைவர்களால் கான்வெண்டிலிருந்து துரத்தப்பட்ட கன்னிகாஸ்த்ரி.  பயந்த கண்களும், ஒட்ட வெட்டப்பட்ட செந்நிற முடியும், புள்ளிகள் விழுந்த முகமும்… குழந்தை போஇருந்தாள்.

இரவுகளில் கேதரீன் அவளது படுக்கையில் படுத்துக் கொண்டு வானத்தில் தென்படும் தீ மழையை, உலக அழிவிற்கான அறிகுறியை, ஒருவித பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முன்னே சுவர்களை, இரும்புக் கதவுகளை, விதிகளைக் கடந்து, மூன்று உறுதிமொழிகளை நெஞ்சில் சுமந்து கொண்டு நடுங்கியபடி இருந்தாள் அந்த இளவயது கன்னிகாஸ்த்ரி. மிகச் சமீபத்தில் சொல்லப்பட்ட அந்த மூன்று உறுதிமொழிகளும் இந்தப் புது உலகத்தில் அதற்குள்ளாக உபயோகமில்லாமல், மதிப்பில்லாமல் போயின

நாடு இடிந்து கொண்டிருந்தது; அனாதைகளைப் போல் ஓடும் கன்னிகாஸ்த்ரீகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் கான்வெண்ட் தவித்தது. ‘இரும்புக் கதவுகளும், சுவர்களும் விழுந்தால் நானும் தப்பிக்கலாம்,’ என்று நினைத்தாள் கேதரீன். அவள் நரம்பினுள் வெறி மின்சாரமாக  கொதித்துக் கொண்டே பாய்ந்தது; அதே சமயம் ஒரு பக்கம் பனி போல உறைந்து கொண்டும் இருந்தது.   அவளின் வெளுத்த முகம் எதையும் வெளிக்காட்டவில்லை. ஆனால் விடுதலை நிச்சயமாகியது; அவள் புதிய வசந்த காலத்தை, இந்த உலகின் மேல் கொடுமையாகப் படரப் போகும் வசந்த காலத்தை உணரும் நேரம் வந்து விட்டது. 

நதாலியிடமிருந்து வாடகைப் பணமாக பறித்துக் கொண்ட வெள்ளிப் பதக்கத்தை ஆட்டி ஓசை எழுப்பியபடியே ‘நீ உண்ணிப் பூச்சியின் இடத்தில் இருந்து கொள்,’ என்று அந்த இடத்தை நிர்வகிக்கும் பெண்மணி கூறினாள். 

கேதரீன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவளுடைய குறுகிய இதயத்தில் முதல்முறையாக வன்முறையை நடுக்கத்துடன் உணர்ந்தாள்; அது இதுவரை எல்லோரும் அவள் மீது திணித்த கோரமான துன்பத்தினால் ஏற்பட்ட மனக்கசப்புடன் கூடிய நடுக்கம். 

நதாலி சன்னமான குரலில், ‘ எனக்கு உன் இடத்தைப் பறித்துக் கொள்ள இஷ்டமில்லை மிஸ். நீ என்னிடம் அன்பாக நடந்து கொள்கிறாய். நான் தரையில் படுத்துக் கொள்கிறேன், அது எனக்கு நம் பிதாவின் துன்பத்தை உணர்த்தும்.’

கேதரீன் யார் முகத்தையும் ஏறிட்டுப் பார்த்ததில்லை. அடர்த்தியான புருவங்களின் உள்ளே அவளின் அனல் கக்கும் விழிகள் இருந்தன. முக்காடு இல்லாத அந்த கன்னிகாஸ்த்ரீயை அவள் அறியாமல்  வெறுப்பை உமிழும் கண்களால் பார்த்தாள்.

கேதரீன் சிறிய உருவ அமைப்பு உடையவள். அவளுடைய தோள்கள் அந்த பியர் மேடையைத் தொட முயற்சித்தது. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அந்த மேடைக்குப் பின்னால் பியர் கோப்பைகளை கழுவிக் கொண்டிருக்கிறாள். அவளின் தலை அந்த மேடையின் ஒரு அங்கம் போல இருக்கிறது என்று அவர்கள் குடித்த பியர் க்ளாஸ்களை அவளின் கறுப்புத் தலையின் மேல் வைத்து, பெரும் வெடிச் சிரிப்புடன் அங்கு வரும் ஆண்கள் அடிக்கடி அவளைக் கிண்டல் செய்வதுண்டு. 

‘இன்னும் கொஞ்சம் பியர், ஹேய் உண்ணிப் பூச்சி, சீக்கிரம் குள்ளி…’

கேதரீனுக்கு எப்போதுமே பயத்திலும் அசதியிலும் அடங்கிக் கிடக்கும் தன் உடம்பை அன்று மாலை  கொஞ்சம்  நீட்டி ஓய்வெடுக்க வேண்டும் போல் இருந்தது. தினந்தோறும் வெட்கத்தாலும் அவமானத்தாலும் குனிந்திருந்த தலையை நிமிர்த்த ஆசைப்பட்டாள். ஒருமுறை  சிறிய பாம்பு ஒன்றைப் பார்த்தது அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது. நாக்கை நீட்டிக் கொண்டு ஆக்ரோஷமாக தன் வாலில் நின்று கொண்டு தைரியமாகத் தன்னைப் பெரிதாகக் காண்பித்துக் கொள்ள முற்பட்டது. ஆனால் கேதரீன் தன்னை ஒருபோதும் தன்னம்பிக்கையோடு வெளிப்படுத்திகொண்டதில்லை. குனிந்து போவதே வேர் கொண்டு விட்டது; அவளுடைய வளர்ச்சி தடைபட்டுப் போனது. அடிபட்டே வளர்ந்த குழந்தையினுடைய தோள்களும், ஓரப்பார்வையும், குனிந்த தலையும், கெஞ்சுகிற அடிமைத்தனமான மனோபாவமும் அவளிடம் இருந்தன. அடிமைப்பண்பின் வழக்கமான குணாதிசயங்களோடு – கீழ் நோக்கும் கண்களுடன், வேர்த்து ஈரமான கைகளுடன், கபடமான குற்றமுள்ள தோற்றத்துடன் அவளின் முதல் தடையற்ற சுதந்திரமான பேச்சு மெதுவான தொனியுடன் தயங்கித் தயங்கி வெளிப்பட்டது. பேசும் போது ஒழுங்கில்லாமல் அலட்சியமாக அங்கங்கே வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி கொடுத்து, குரலில் வெறுப்போடு அவள் முதன்முதலாக பேச ஆரம்பித்தது அவளினுள் பெரிய உருமாற்றம் ஏற்பட்டதற்கான அறிகுறியைச் சொல்லியது .

‘நடிப்பதை நிறுத்து…  உனக்கு நன்றாகத் தெரியும் என்னை யாரும் ‘மிஸ்’ என்று அழைப்பதில்லை… நான் உண்ணிப் பூச்சி… என்னை இனிய சொற்களால் ஏமாற்ற வேண்டாம்… எனக்கு எல்லாம் தெரியும்… நான் படுப்பது தரையில்தான், ஆனால் நீ சொல்வது போல் அது என் இடம்… பழைய குதிரைக் கம்பளியாக இருந்தாலும் இது என் அருமையான கம்பளி. இதைப் பாதுகாப்பது என் உரிமை. நீ சொல்வது போல் சிலுவைதான் உன் உரிமை…’

நதாலி அதைக் கேட்டு அழுது கொண்டே அசதியினால் தூங்கினாள். அந்த மரத்தாலான தரை கடினமான மரத்தைப் போல முடிச்சுக்களையும் சிராய்களையும் கொண்டிருந்தன. 

நதாலி சிலுவையை மார்போடு அணைத்துக் கொண்டாள். அவள் இடைவிடாமல்  மெதுவாக ஜபித்துக் கொண்டே இருந்தாள்: ‘எங்கள் பிதாவே’ ‘உம்முடைய சித்தத்தின் படி ஆகக் கடவது’  ‘தீயவைகளிலிருந்து ரட்சியும்’ என்ற வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்தாள். 

கருமையான வெற்றுக் கண்ணிமைகள் கேதரீனின் வறண்ட கண்களை மூடியிருந்தன. அவள் ஜபித்துக் கொண்டிருக்கவில்லை. அவளுடைய முழு உடம்பும் கிளர்ந்து அழுதுகொண்டிருந்தது: ‘இந்தத் தினசரி துக்கத்திலிருந்து என்னை விடுவியுங்கள்’ ‘தீயவை என்னை ஆக்கிரமிக்கட்டும், ஏனெனில் அதுவே என் வடிகால்; அதன் மூலமாக மட்டுமே நான் வாழ்க்கையைக் காண முடியும்.’

ஒரு நாள் நகரத்தின் மேயர் மக்கள் கூட்டத்தால் வெடித்து விடும் நிலையில் இருந்த அந்த ஊரைக் காலி செய்ய உத்தரவிட்டார். 

அன்று காலையில் மக்கள் வீதிக்கு வந்தனர். அந்த ஊரின் மக்களும், நகர்ப்புறத்தின் மக்களும் நடக்க ஆரம்பித்தனர். வழியில் மற்ற ஊரின், நகரின், கிராமத்தின் மக்களோடு சேர்ந்து நடந்தனர்.  ஒரு நாடே தன் மக்கள் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க ஆரம்பித்திருந்தது. 

நாங்கள் தோற்று விட்டோம். எங்கள் பந்தம் அறுந்து சுதந்திரமானோம். ஒவ்வொருவரும் அவர்களின் சிறையை, கவசத்தை, உறையை, பழக்கத்தை, மரபுகளை, நிறைகுறைகளை, வீடுகளை, தோட்டத்தை, உடமைகளை, நிலத்தை, குடும்பத்தை விட்டு நடந்தனர். இந்த சுதந்திர மனிதர்கள் தளர்வாக சாலையில் தங்கள் தொடர்பைத் தேடினார்கள்; சுதந்திரத்தை எண்ணி வருந்தினார்கள்.

சேதமடைந்த வீடுகளின் உட்புறம் தெளிவாகத் தெரிந்தது. மேயர் வீட்டின் வரவேற்பு அறை எல்லோருக்கும் காணக் கிடைத்தது. அதனோடு மனிதர்களும் அவர்கள் ஆழ்மனதில் இருப்பதைக் கண்டு கொண்டனர். அவர்களினுள் குற்றமற்ற பூர்ஷ்வாக்கள், தைரியமான விவசாயிகள், ஆதரவளிக்கும் நல்ல பெண்கள், கோழைகள், துரோகிகள்  அனைவரையும் இனம் கண்டு கொள்ள முடிந்தது. மற்ற சாதாரண நாட்களில் எப்படிப் பட்டவர்கள் என்று தெரியாதவர்களுடைய உண்மையான முகம் அப்போது வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. சல்லடையால் மக்கள் சலிக்கப்பட்டார்கள். பெரும்பாலும் அழுக்கானவர்களாக, சுயநலவாதிகளாக இருந்தனர். ஒரு ஆள் அழுது கொண்டிருந்த குழந்தையிடமிருந்து பழத்தைப் பிடுங்கினான். ஒரு உயரமான இளைஞன் வழியில் இருந்த ஒரு மூதாட்டியைத் தள்ளி விட்டு முன்னேறினான். அந்த நீண்ட பயணத்தில் பல குழுக்கள் உருவாயின. இறந்து கிடந்தவர்கள் மட்டுமல்லாது வழியில் வயதானவர்கள், இயலாதவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் சாலையோரமாக வரிசையாக நின்று வழியை மறித்தனர். 

புறப்படும் போது அங்குமிங்குமாக பழைய அழிந்து கொண்டு வரும் ஜாதிகளைக் காப்பாற்றவும் முயற்சி நடந்தது.  மேடம் பீஷோன் பறவைக் கூண்டைத் தன் மடியில் வைத்துக் கொண்டு காரில் போனார். பிஸ்த்ரோ உரிமையாளரின் பெண் நீனா,  தன்னையும் அழைத்துச் செல்லும்படியான நதாலியின் கெஞ்சல்களைப் பொருட்படுத்தாமல் சைக்கிளில் புறப்பட்டாள். 

சிறிது நேரம் கழித்து எல்லோரும் எங்களுக்குச் சமமாக ஆக வேண்டியிருந்தது. மேடம் பீஷோனின் வண்டியில் பெட்ரோல் தீர்ந்து போய் எங்களுடன் நடந்தார். நீனா எங்களை வெறுப்புடன் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தாள். அவளைத் தள்ளி விட்டு விட்டு சைக்கிளைப் பிடுங்கிக் கொண்டு போனான் ஒரு வலுவான இளைஞன்.

கேதரீனின் முதலாளிகள் அவளைக் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்கள். இவ்வளவு நாட்கள் அவளை அடிமையாக்கிச் சிதைத்து விட்டு இப்பொழுது அவள் வேண்டாமெனப் போய் விட்டார்கள். 

‘கேதரீன், அழுக்கான அந்த டம்ளர்களைக் கழுவு’… ‘உண்ணிப் பூச்சி, உன் மார்புச் சளியை ஆற்றில் போய் கழுவிக் கொண்டு வா’…’உண்ணிப் பூச்சீஈஈஈ’…’அழுக்கு மிருகமே’… ‘அனாதையே’… ‘பாவத்தின் பிறப்பே’… ‘கேதரீன், உனக்கு இரண்டு வெள்ளை உடுப்புக்கள் போதும் வாழ்நாளுக்கு, நீ வளரப் போவதில்லை புழுவே’…’கேதரீன், இரவுச் சாப்பாட்டிற்கு மீனின் தலையும் கண்ணும் உனக்குப் போதும். நீ குடும்பம் இல்லாத அனாதை. நாங்கள் உனக்குச் சாப்பாடு போடுகிறோம் என்ற நன்றி இருக்கட்டும்.’  ‘கேதரீன்  உன்னுடைய சின்ன உடம்பிற்குக் கொஞ்ச நேரத் தூக்கம் போதுமானது…’  ‘வாடிக்கையாளர்கள் போன பிறகு எல்லாவற்றையும் கழுவி வைத்து விட்டு நீனாவிற்கு ஒரு புது டிரெஸ் தைத்து விடு. நாளை அவள் பதிவாளரின் வீட்டு பார்ட்டிக்குப் போக வேண்டும்.’

இப்போது யாருக்கும் தேவைப்படாத உண்ணிப் பூச்சி மனிதர்கள், மிருகங்கள், பழுதான வண்டிகள் மத்தியில் ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டாள். இந்த மோசமான உலகத்தில் தனியாகிப் போனாள்; ஆனால் சுதந்திரமாக இருந்தாள். தன் முதல் வசந்த காலத்தை முகர்ந்தாள். புகை சூரியனை மறைத்தது, நிலங்கள் சூறையாடப்பட்டன. தான் புதிதாக அனுபவிக்கும் வசந்த காலத்தை தன்னைச் சுற்றிப் பரவ விட்டாள். அவளுடைய அமைதிக்குள் ஒரு வகையான பிரார்த்தனை பீறிட்டது:

‘நான் கேதரீன், அனாதை. சிறு வயதில் இருந்து  பிஸ்த்ரோவில் சீட்டாடும் மனிதர்களின் பின்னால் ஒரு வெளிறிப் போன முகமாக இருந்தேன். அழுக்குப் பிடித்த சுவர்களின் பிசுக்கு படிந்த மேஜைகளின் ஒரு பகுதியாகிப் போனேன். இப்போது தப்பித்து விட்டேன். படத்தின் சட்டம் கீழே விழுந்தது. அடைபட்டிருந்த நான் வெளியே நானாக வந்தேன். என்ன ஒரு உருவம்! குறுகிய மார்பு, விசித்திரமான முகம், பெரிய வளைந்த எலும்பு துருத்தும் நெற்றி. இந்தப் பெரிய நெற்றி என் முகத்தை முழுவதும் ஆக்கிரமித்து மற்றதை விழுங்கி விடுகிறது.  எமனின் தலை என்று எல்லோரும் சொல்வது உண்மைதான்; ஏனென்றால் என் தீர்க்கமான கண்கள் என் பெரிய நெற்றியினுள் காணாமல் போய் விடுகிறது; என் தலைமுடியும் பின்னால் இறுக்கமாக இழுத்துக் கட்டப்பட்டு கறுப்பு அரக்கைத் தேய்த்தாற் போல் இருக்கிறது; என் இறுக்கமான தோலிற்குப் பின்னாலிருக்கும் எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கின்றன. 

‘என் வயதா? சரியாகத் தெரியாது. சந்தோஷமில்லாத, முடிவில்லாத வேலைகள் வருடக்கணக்கில் செய்ததற்கு ஒரு அளவில்லை. அடி, வேலை, சாபம் எல்லாவற்றையும் சமாளித்திருக்கிறேன். அத்தனை நாட்களும் ஒரு பயங்கரமான நீண்ட நாளாகத் தோன்றுகிறது. இப்போதுதான் எனக்கு வசந்த காலம் வந்திருக்கிறது. எனக்கு வேறு யாரையும் தெரியாது. ஆனாலும் எனக்கு இது பிடித்திருக்கிறது. 

ஒரு பெண் விழுந்து கொண்டிருக்கிறாள். எனக்கு இன்னும் அந்த தேவ வாக்கியம் ஞாபகம் இருக்கிறது. ‘கர்ப்பிணிப் பெண்களுக்கு அக்காலம் வேதனையானது’. நான் உண்ணிப் பூச்சி, பழைய கடற்செடியைப் போன்று காய்ந்து போனவள். திணற அடிக்கப்பட்ட , சரியாகப் புரிந்து கொள்ளப்படாத அவளைப் பார்த்துக் கத்தினேன், ‘சபிக்கப்பட்டவளே!’ நான் ஒன்றுமில்லாதவள், மற்றவர்களால் சூறையாடப்பட்டவள். ஏழ்மையின் அருமையான உதாரணம் நான். அழகில்லாமல், கையில் காசில்லாமல், வயிற்றில் குழந்தையில்லாமல், நெஞ்சில் ஒருவருமில்லாமல், மற்றவர்கள் கடக்கத் தவறும் தயங்கும் தடைகளை நான் எளிதில் கடப்பேன். என்னுடைய கூர்மையான கண்கள் உலகின் இந்த உயரிய விஷயங்கள் எதையும் இல்லாக் குறையாக உணரவில்லை!’

நாங்கள் ஓட வேண்டியிருந்தது. ஏனென்றால் எதிரி எங்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான். கூடவே எடுத்துக் கொண்டு போனதெல்லாம் தடையாகியது.  உணர்ச்சிவசப்பட்டவர்களும், பேராசைக்காரர்களும் முன்னேற முடியாமல் தவித்தனர். அனேகமாக அவர்கள் தங்கள் பாரத்தோடு இறந்து போவர். 

கேதரீனிடம் எப்போதுமே பொக்கிஷங்கள் எதுவும் இருந்ததில்லை.  அவள் தப்பு செய்பவளைப் போல வேகவேகமாக மூச்சு விடுவதை நிறுத்தினாள். யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் நடந்தாள். அவளுடைய நாசி விரிந்து யாராலும் தடுக்க முடியாத சுதந்திரமான காற்றை, அந்த நாளின் சாரத்தை  உள்வாங்கிக் கொண்டது. 

அதிகாரம் இல்லாமல் போயிற்று. மற்ற எல்லாவற்றையும் போல அதிகாரம் ஊழல் மலிந்து இறந்து போயிற்று. 

நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். எங்கள் பெருமைக்குரிய மெலிதான பாரம்பரியம் நொறுங்கியது. சுதந்திரம் என்ற திடீர் மாற்றம் வந்திருக்கிறது. ஏன் இந்த முட்டாள்கள் வெற்றுடம்புடன் இரும்பிற்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்? கவனியுங்கள் சிப்பாய்களே, உலகமே சுதந்திரமாகி விட்டது.  இனி முதலாளி இல்லை, தொழிலாளி இல்லை, தந்தைகள் இல்லை, தனயன்களும் இல்லை. ஏன் இந்தச் சிப்பாய்களும் தங்களை விடுவித்துக் கொள்ளக் கூடாது? 

நதாலீ தன்னுடைய சுதந்திரத்தை நினைத்து அழுதாள். தன்னை உருவாக்கி சரியாகப் பாதுகாப்பாக நடத்திக் கொண்டு சென்ற விதிகளை நினைத்து அழுதாள். அவள் எடுத்துக் கொண்ட மூன்று உறுதிமொழிகளும் அவளின் குழந்தை இதயத்திற்கு ஆறுதல் அளிக்கவில்லை. இனி அமைதியான பிரார்த்தனை நேரமோ, பாதுகாப்பிடமோ இல்லை. அவளைச் சுற்றி அழுகுரலும் தாங்கொணாத் துயரமும்தான் இருந்தது. 

‘எனக்கு ஆதரவளித்த விதிகளே, இவ்வுலகில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் பல வேலைகளிருக்க கடவுளின் சேவையைத் தேர்ந்தெடுத்த என்னை கடவுளிடம் கொண்டு சேர்த்திருக்கலாம்! கடவுளே, இந்த ஒழுங்கீனமான நாட்கள் உங்களிடமிருந்தா வந்தன?  ஒரு மையப்புள்ளி இல்லாத இந்த நாட்கள் உங்களுடையதாக இருக்க இயலாது.  பூமி தன் மையத்தை விட்டு பாதையில் இருந்து விலகி விட்டது. நாங்கள்  சிலுவையின் மையமாக இருந்த மனிதர்கள் வாழும் கோளிலிருந்து கும்பலாக தள்ளிவிடப்பட்டோம்.’ 

பயந்தபடி நதாலீ கேதரீனைப் பின்தொடர்ந்து போய்க் கொண்டிருந்தாள். கேதரீன் அதைப் பார்த்தும் பார்க்காதது போல் நடந்தாள். எதிரி எங்களுக்குப் பின்னால், எங்களுக்கு மேலே இருக்கிறான். இப்பொழுது எங்கள் முன்னாலும் வந்து விட்டான். நாங்கள் தலைதெறிக்க ஓடினோம். ஏனெனில் எங்கள் முன்னாலும், எங்களைச் சுற்றிலும் எதிரிகள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் நெருங்கினர். தப்பிக்க வழியில்லை. 

ஒரு சிப்பாய் வழியை மறித்தான். பிரச்சினையில்லாமல் போ உண்ணிப் பூச்சி, அவன் கருப்பான, சின்னதான ஒரு உயிரினத்தை நிறுத்த மாட்டான். ஏனென்றால், அவன் தூரத்திலிருந்தே நதாலியைப் பார்த்து விட்டான். அவன் நதாலிக்காகக் காத்துக் கொண்டிருந்தான்: 

‘வென்றவனுக்குக் கப்பம் கட்டாமல் இதற்கு மேல் செல்ல முடியாது அன்பே!’ 

நதாலீ, கடவுளுக்காகப் படைக்கப்பட்ட ஆட்டுக்குட்டியே, இதோ உன் தியாகத்திற்கான நேரம், நிலையில்லாத வாழ்வால் முன்பே வகுத்தமைக்கப்பட்ட  நிகழ்ச்சிக்கான உன் நேரம் வந்து விட்டது. வென்றவன்,வலிமையான கரங்களால் உன்னைத் தூக்கிக் கொண்டு செல்கிறான், உன் நகங்களும் பற்களும் போராடியும் கூட, தன் மெலிதான செந்நிற தலைமுடியுடைய தங்க நிறப் போர்ப் பரிசைக் கவர்ந்து செல்கிறான்.   

கேதரீன் நதாலியின் கூக்குரலைக் கேட்டும் பின்னால் திரும்பாமல் நடந்தாள். அவளுக்குத் தன் உடம்பைக் கிண்டல் செய்து சிரித்த பெண்களின் ஞாபகம் வந்தது: ‘மற்றவர்களின் தவறுக்காக ஒருவர் அனுபவிக்கத்தான் வேண்டும், அதுதான் நியாயம்.’  

இரவு வந்ததும் உண்ணிப் பூச்சிக்கு சாப்பிடவோ குடிக்கவோ ஒன்றுமில்லை. உடலில் பலமுமில்லை. அவள் பாதங்கள் காயங்களினால் எரிந்தன.  சிறிது தூரத்தில் ஒரு கிழவன் ஒரு போத்தலில் இருந்து ஒயின் குடித்துக் கொண்டிருந்தான். ஆனாலும் அவளுக்கு தர்மம் கேட்க விருப்பமில்லை. அவள் தவித்துக் கொண்டு சாக ஆயத்தமாக இருந்தாள். அதுதான் அவளுக்குப் பெருமையும் மரியாதையும். 

வயலுக்கு நடுவே புல்லும் வைக்கோலும் நிறைந்த ஒரு கொட்டகை தென்பட்டது. தன் நோகும் கால்களை அந்த இனிமையான மிருதுவான புல் மெத்தையின் மேல் கிடத்தினாள். இரவு வந்தது. சத்தங்களின் நடுவே ஏற்படும் இடைவெளியில் வசந்த காலம் எப்போதும் போல ஊடுருவியது. இனி அழுகை, வெடிகுண்டு, சப்தமான விமானங்கள் இல்லை. இரவின் இருண்ட நெஞ்சுப் பகுதியை சொந்தம் கொண்டாடும் இரவுப் பூச்சிகள் பல வருடங்களாகப் பழகிய உரிமையுடன் அவைகளின் உலோகத்தையொத்த ரீங்காரத்துடன்  சூழ்ந்து கொண்டன.

வசந்த காலத்தின் இனிமையான இரவு. உண்ணிப் பூச்சிக்கு பாத்திரங்கள் கழுவும் வேலையோ, தரையைத் துடைக்கும் வேலையோ இல்லை. ‘ஏய் உண்ணிப் பூச்சி! காதலிக்க அருமையான இரவு! ஆனால் உனக்குக் கவலை இல்லை; நீ ஒரு போதும் அழகாக மாற முடியாது!’ தன் காதலனின் கையோடு கை சேர்த்துக் கொண்டு வரும் நீனாவின் குரலைக் கேட்க வேண்டாம்.

காய்ந்த வைக்கோலின் வாசனை, அதன் மேல் வியர்வையில் நனைந்த ஒரு வெள்ளை முகம் நிலவொளியில் ஒளிர்கிறது. மங்கலான வெளிச்சத்தில் இதோ உன் முதல் ஆண்மகன். 

அவன் குடித்திருந்தான்; வெயிலால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையைப் போல் இருந்தான். அவனால் உன்னைச் சரியாக பார்க்க முடியவில்லை உண்ணிப் பூச்சி. உன்னுடைய முகம் அவனுடைய போதையான கண்ணின் முன் நிழலாடுகிறது. அவன் உனக்கு சாக்லேட்டும் ஒயினும் வைத்திருக்கிறான். அவன் உன் உடுப்பைக் கழற்றுகிறான்; உன்னுடைய கருப்பு உடை உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அவன் கைகள் செயலிழந்து விகாரமாக இருக்கின்றன. அவனுடைய காய்ந்து கொண்டிருக்கும் மூளை உன்னுடைய தீண்டத்தகாத உடம்பில் மாற்றம் செய்கிறது. ஒரு க்ஷண நேரம் நீ இளவரசியாக மாறியதை அறிய மாட்டாய். 

கடுமையான தூக்கம் உடனே காதலனை ஆட்கொள்கிறது. 

மனிதர்களின் மிருகங்களின் சப்தங்கள்; உழுத நிலங்கள்! ஆ! இந்த அறுவடை வித்தியாசமாக இருக்கப் போகிறது! அன்று விதைக்கும் நாள்; நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். 

கேதரீன் தூங்கவில்லை. அவள் தன் அருகில் குடித்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த சிப்பாய் பச்சைச் சீருடையில் மிகவும் இளமையாகத் தெரிந்தான். அவ்வப்போது தூக்கத்தில் சிரித்தான். அவன் பற்கள் சிறியதாக வெண்மையாக இருந்தன. 

விடியற்காலை வானத்தைக் கலைத்தது. சிப்பாய் புரண்டு படுத்தான். தன்னுடைய தளர்ந்த கைகளால்  துணையைத் தேடினான். 

கேதரீன் எழுந்து நின்றாள். கடைசி முறையாக அந்தப் பையனைப் பார்த்தாள். மிகவும் இளமையாக மிகவும் அழகாக இருந்தான். அவன் போதை தெளிந்து என்னைப் பார்க்கக் கூடாது. அவன் எழுந்து என்னைப் பார்த்த பின் அவன் செய்த தவறை நினைத்து என்னை அவமானப்படுத்தும் வகையில் சிரிக்கக் கூடும். அதை என்னால் சகிக்க இயலாது. அவனுக்குத் தான் ஒரு உண்ணிப் பூச்சியுடன், மற்றவர்களின் கேலிக்கும் வெறுப்பிற்கும் ஆளான ஒரு வேலைக்காரியுடன் உறவு வைத்துக் கொண்டது எப்போதும் தெரியக் கூடாது. 

கத்தி வெளிச்சத்தில் பளீரிட்டது. அவள் பழக சில மிருகங்களைக் கொல்ல வேண்டியிருந்தது. ரத்தம் சூடாக பிசுபிசுப்பாக இருந்தாலும் அவளால் செய்ய முடிந்தது. 

இந்த மென்மையான பலமான உடம்பில் எந்த இடத்தைத் தேர்வு செய்வது? மார்பு வேண்டாம், அங்கே நான் என் தலையைச் சாய்த்திருந்தேன். தொண்டைதான் சரியான தேர்வு!

  அவள் கத்தியை முழுவதுமாக கைப்பிடி வரை சொருகினாள். ரத்தம் பீறிட்டு அவள் மேல் தெறித்தது. 

சட்டென்று அவனின் ஒரு கண் திறந்தது; நீல நிற குழந்தைக் கண்கள். அந்தக் கண்களில் பயத்தை விட வியப்பு மேலிட்டிருந்தது. கேதரீனின் கைகள் நடுங்கின.

நிலைத்து நின்று விட்ட அந்த நீலக் கண்களில் அவள் தான் பார்த்தறியாத இளமைக் காலத்தையும், தோட்டத்தையும் கண்டாள். 

 

(பனிக்காலம் 1946-1947)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Gayathri R

Gayathri R