Skip to content

பாதி கதை

பந்துபோல் உருண்டு வந்த உளுந்து மாவை கரண்டியில் எடுத்து ஜாங்கிரித் துணியில் இட்டு கொதிக்கும் எண்ணெயில் சுழிசுழியாக சமையல் மாமி வரைந்து கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தாள் தைலாம்பாள்.

கறுப்பாக எண்ணெய் பிசுக்கு அடுக்கடுக்காகப் படிந்த அந்த வாணலியை வாஞ்சையோடு பார்த்தாள். திருமணம் நிச்சயமானபின் அனுப்பர்பாளையத்தில் இருந்த தங்கவேல் கவுண்டர் பாத்திரக் கடையில் பெரியம்மா தட்டித் தட்டிப் பார்த்து வாங்கியது. “இந்தக் கைப்புடி இல்லாத கல்கத்தா சட்டிய எடுத்துக்குங்க. ரொம்ப நல்லா இருக்கும்” என்ற கவுண்டரைப் பார்த்து “சரி! இவ பேர் பொறிச்சுக் குடுங்க” என்று பெரியம்மா லிஸ்ட் போட்டு வாங்கிய பல பாத்திரங்களில் இந்த வாணலிதான் முதல் பாத்திரம். இந்த ஐம்பது வருடங்களில் தன் பெயர் பொறிக்கப்பட்ட பல பாத்திரங்கள் வளைந்து நெளிந்து அடிப்பிடித்து பிளந்து இறந்து போனதில் உயிரோடு கடைசியாக எஞ்சி இருப்பதும் இது ஒன்றுதான். அவ்வப்போது தைலா என்று பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்தை ஆள்காட்டி விரலால் தடவித் தடவிப் பார்ப்பாள், அலாவுதீன் ஜீனி போல ஏதோவொன்று தன்னை பால்ய பருவத்துக்கு அழைத்துச் சென்று விடாதா என்ற ஏக்கத்துடன்.

அப்போதெல்லாம் அவள் என்றுமே வயிறு நிறைய சாப்பிட்டதில்லை. ஏழ்மை. தந்தை காந்தியவாதி. அவர் கதர் துணிக்கடையில் வேலை செய்து கொண்டு வரும் சொற்ப சம்பளத்தில் ஏழு உயிர்கள் சாப்பிட்டு வாழ்க்கை நடத்தியது ஹூடினி சாகசம்தான். தினமும் பள்ளிக்கூடம் செல்வதற்கு முன்னோ அல்லது வீட்டிற்கு வந்த பிறகோ ரேழியில் இருக்கும் ராட்டையில் நூல் நூற்க வேண்டும் என்பது அப்பா வைத்த சட்டம்.

பொட்டி ராட்டைதான் தைலாவுக்கும் அவள் தம்பி சுந்தருக்கும். கிஸான் ராட்டையில் அவள் அக்காக்களும் அண்ணனும் நூற்பார்கள். அப்பாவும் அம்மாவும் ஆறு கதிர் ராட்டையில். பட்டை பட்டையாக அடித்திருக்கும் பஞ்சை லாகவமாக கதிரில் இருக்கும் நூலுடன் இணைத்துச் சுற்றி கூம்புபோல் நூல் சேர்ந்தவுடன் சதுரமாக இருக்கும் சட்டத்தில் சுற்ற வேண்டும். நூறு நூல் சேர்ந்தால் ஒரு கண்ணி. கண்ணியை சட்டத்தில் இருந்து எடுத்து கால் கட்டை விரலில் நுழைத்து முறுக்க வேண்டும். அப்படிப் பத்து கண்ணி சேர்ந்தால் ஒரு சிட்டம். ஒரு சிட்டத்துக்கு இருபத்தைந்து பைசா கிடைக்கும். கடைக்காரர் நூலை வாங்கிக் கொண்டு ஒரு சிறிய புத்தகத்தில் வரவு வைத்துக் கொள்வார். பஞ்சு வாங்கிய கணக்கை கழித்துக் கொண்டு தீபாவளி சமயத்தில் வரும் பணத்தில்தான் அவர்களுக்கு புதுத் துணி. தைலாவும் சுந்தரும் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு சிட்டம் மட்டுமே நூற்பார்கள். பள்ளியில் இருந்து வந்து அவசர அவசரமாக நூற்று விட்டு தெருப் பிள்ளைகளோடு விளையாட ஓடுவார்கள். சற்று அயர்ந்து, இன்று நூற்க வேண்டாம் என்று முடிவு செய்தால் அவள் தந்தை இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு குறும்புச் சிரிப்புடன் “கொட்டாவி விடுகிறீர், குறுகுறு என்கிறீர், கொட்டை நூல் நூற்றால்தான் ஆகாதோ…” என்பார். அப்பாவைப் பார்த்து ஒரு வெட்கப் புன்னகை புரிந்துவிட்டு சந்தோஷமாக கொஞ்ச நேரம் நூற்பாள்.

‘வாடா சுந்தர், இப்பத்தான் வராப்ல இருக்கு’ என்ற சுவாமிநாதனின் உபசாரம் கேட்டு மெல்ல தலையைத் திருப்பி வாசலைப் பார்த்தாள். வீடு அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. தன் மனைவி, குட்டிகள், பெட்டிகளோடு சுவாமிநாதன் பக்கத்தில் வளைந்து நின்று சிரித்துக் கொண்டிருந்தான் சுந்தர். ‘எந்தக் காலத்துல நம்மூர் ரயிலெல்லாம் டயத்துக்கு ஓடீருக்கு அத்திம்பேர், சொல்லுங்கோ…ஒரு மணிக்கூறு பேசின் ப்ரிட்ஜ்ல நிறுத்திப்பிட்டான். ஹாப்பி ஃபிப்டியத் வெட்டிங் ஆனிவர்சரி…அக்கா எங்க’ என்று சந்தோஷமாக சமையலறைக்குள் வரும் சுந்தரை விச்ராந்தியாகப் பார்த்தாள் தைலாம்பாள்.

‘அம்பது வருஷம் அத்திம்பேர் உன்னோட குப்பை கொட்டிட்டார். ஹி…ஹி…’ என்று ஆண்கள் ஹாஸ்யம் என்று நினைக்கும் டெம்ப்ளேட் கண்றாவி வாக்கியத்தோடு அவன் அசடு வழிந்ததைப் பார்த்து தைலாம்பாளுக்கு பற்றிக்கொண்டு வரவில்லை,மாறாக பாவமாக இருந்தது.

‘அதுசரி! குப்பையாக்கினவா கொட்டத்தானே வேணும்.’

அவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் ‘என்ன இது? இன்னிக்கும் அடுக்களையில். சமையல் மாமி இருக்கால்ல. எழுந்து வெளிய வா’ என்றான்.

‘ஆகட்டும். சித்த நாழி கழிச்சு வரேன்’ என்றாள் தைலாம்பாள்.

ஹாலில் நடுநாயகமாக கம்பீரமாக தேஜஸோடு வீற்றிருந்தார் சுவாமிநாதன். எல்லோரும் வாய் கொள்ளாத சிரிப்போடு அவரைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

‘அத்திம்பேரைப் பாரேன். என்ன அழகு அந்தப் பெருமாளைப் போல. எனக்கு மட்டும் திருப்பாணாழ்வார் மாதிரி ஞானம் இருந்தா அமலனாதிபிரான் போல சுவாமிநாதபிரான்னு ஒரு பத்து பாசுரம் அவர் மேல எழுதியிருப்பேன். நீ ரொம்ப கொடுத்து வச்சவ அக்கா. எத்தனை பேருக்கு உன் மேல பொறாமை தெரியுமா?’

‘ஹ்ம்…பொறந்தாத்து பெருமைய உடம்பொறந்தான்ட்ட அளக்கறாம்பா, என் புக்காத்து பெருமைய உடம்பொறந்தான் அளக்கற பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். போ, போய் வேலையப் பாரு.’

ஹாலில் எல்லோருடனும் சாந்தமாக முகம் மலர உரையாடும் தன் கணவரைப் பார்த்தாள். ஆறடி உயரம். கூர்மையான மூக்கு. தீர்க்கமான கண்கள். தலைக்குப்பின் ஒளிவட்டம் இல்லாதது மட்டுமே குறை. ‘எழுபத்தி எட்டு வயதிலும் அட்ட சட்டமா நன்றாகத்தான் இருக்கிறார் பார்க்க. சமூகம் கெட்டவை என்று வரையறுத்திருக்கும் எந்தப் பழக்கமும் இல்லை. குடும்பமும், நண்பர்களும் அவரை காட்ஃபாதர் போல் மதிக்கின்றனர். எனக்கு அவரிடம் பிரச்சினை என்று சொன்னால் யாரும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அதைவிட எதில் பிரச்சினை என்று சொன்னால் எல்லோரும் எப்படியெல்லாமோ சிரிப்பார்கள்’ என்று நினைத்தாள் தைலாம்பாள்.

வேண்டாம் இந்தக் கூத்து என்று சொல்லியும் கேட்காமல் தங்கள் ஐம்பதாவது கல்யாண நாளை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறாள் அவர்களின் ஒரே மகள் பரணி. தைலாம்பாளுக்கு ரசிக்கவேயில்லை. ‘என்ன வாழ்ந்து முடிஞ்சுண்டேன்னு இப்படிக் கூத்தாடறா? அடுக்களையே திருப்பதின்னு இருந்தாச்சு. இன்னும் இந்தப் பாத்திரம் பண்டமெல்லாம் என்னண்ட சண்டை மட்டும்தான் பிடிக்கல.’

மூன்று வேளையும் விதவிதமாகச் சாப்பிட வேண்டும் சுவாமிநாதனுக்கு. வெங்காயம் பூண்டு சாப்பிடுவதில்லை. அதனாலும், சிலபல கொள்கைகளாலும் வெளியில் என்றுமே சாப்பிடுவதில்லை. வேறு வழியில்லை தைலாம்பாளுக்கு. மூன்று வேளையும் சமைத்தே ஆக வேண்டும். சுவாமிநாதனுக்கு காலையில் இரண்டு டிஃபன் வேண்டும். இட்லி – பொங்கல், தொட்டுக் கொள்ள சட்னி, சாம்பார் அல்லது பூரி – இட்லி அல்லது தோசை – இட்லி, இப்படி…

மதியம் சாம்பாருடன், ரசம், கூட்டு, காய், பச்சடி இல்லையென்றால் அவியல், துவையல், வத்தக்குழம்பு, எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா… மொத்தத்தில் அவருக்கு ஐந்துவகை உணவு மதியம் வேண்டும். இரவு மறுபடி சிற்றுண்டி. அவர் சாப்பிடுவது என்னவோ கொஞ்சம்தான். எல்லாவற்றிலும் கொஞ்சமே கொஞ்சம் எடுத்துக் கொள்வார். ஆனாலும் அத்தனையும் வக்கணையாக இருக்க வேண்டும். ‘I am a connoisseur of food’ என்று எல்லோரிடமும் பெருமை பீற்றிக் கொள்வது வாடிக்கை.

சுவாமிநாதனைச் சுற்றி உறவினர் கூட்டம் பவ்யத்துடனும் கண்களில் ஏகப்பட்ட மரியாதையுடனும் வீற்றிருந்தது. அவர் பேசும் ஒவ்வொரு சொல்லையும் கூட்டம் அப்படியே உள்வாங்கிக் கொண்டிருந்தது. சமையலறையில் இருந்து தைலாம்பாள் பார்த்தபோது அதிநவீன நாடகம் ஒன்று அரங்கேறிக் கொண்டிருப்பதைப் போல் அவளுக்குத் தோன்றியது. ‘பாறை எல்லாருக்கும் தெய்வமாயிடுத்து, தெய்வம் எனக்கு மட்டும் பாறையாயிடுத்து.’ அவள் வயிறு சங்கடம் செய்தது. மடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கைகளைப் பார்த்தாள். பூப்போட்ட சேலையின் மேல் அவை சுகமாகப் படுத்திருந்தன.

“எனக்கு இந்த தடவை பூப்போட்ட பாவாடை வேணும் தீவாளிக்கு” என்று அப்பாவிடம் கேட்ட தைலாம்பாளை அவள் அக்கா காந்திமதி கண்களால் அடக்கினாள். தீபாவளிக்கு, கடையில் வேலை செய்பவர்களுக்கு தள்ளுபடி விலையில் துணிகள் எடுக்க அனுமதி உண்டு. வெறும் வெள்ளைத் துணி விலை கம்மி. அதனால் தைலாவின் தந்தை வெள்ளைத் துணி சில மீட்டர்கள் வாங்கி அதை பச்சையிலோ அல்லது நீல நிறத்திலோ சாயப்பட்டறையில் முக்கி வாங்கிக் கொண்டு வருவார். அது அவர்களின் தீபாவளித் துணியாகவும் பள்ளிச் சீருடையாகவும் இரட்டை வேலை செய்யும். தைலாம்பாள் பெரியவளானதும் அவள் அத்தை முதல்முதலாக பாம்பேவிலிருந்து பூப்போட்ட சீட்டிப் பாவாடை வாங்கி வந்தபோது தைலாவுக்கு உலகம் மிக அழகானதாகத் தோன்றிற்று. ‘நான் நினைச்சது எல்லாம் நடக்கறது சுந்தர். விதவிதமா சாப்பிட மட்டும் கிடைச்சுதுன்னா போறும். உலகத்துலயே சந்தோஷமான ஆள் நான்தான்’ என்று இரு கைகளையும் மேலே தூக்கி, முகத்தை வான் நோக்கி வைத்துக்கொண்டு பரபரவென்று பூப்போட்ட பாவாடையுடன் சுற்றினாள்.

‘தைலா அருமையா சமைப்பாள்’ என்று அவ்வப்போது, முன்னரே அறிவிக்காமல், தனக்குத் தெரிந்தவர்களை சுவாமிநாதன் தன் வீட்டில் சாப்பிடக் கூட்டிக் கொண்டு வருவதுண்டு. என்றைக்காவது ஒரு நாள் தைலாம்பாளுக்கு உடம்பு சரியில்லையென்றால் ‘பெருசா ஒண்ணும் பண்ண வேண்டாம். ஒரு சீரக ரசம் வெச்சு, ஏதாவது ஒரு காய் பண்ணி, துகையல் அரைச்சு, அப்பளத்தை சுட்டு வச்சுடு. போறும்’ என்பார். தைலாம்பாளுக்கு அழுகையாக வரும்.

அவர்களின் ஒரே பெண் பரணி ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்தாள். விடுமுறையில் வீட்டுக்கு வருவதோடு சரி. அப்படியே அவள் வக்கீலுக்கும் படித்து அவளுக்குத் திருமணமும் செய்து கொடுத்தாயிற்று. ‘இதோ பிழைத்துக் கிடந்தால் இன்னும் இரண்டு வருடத்தில் அவளின் ஐம்பது வயது பிறந்த நாளையும் கொண்டாடி விடலாம்’ என்று நினைத்தாள் தைலா.

‘அம்மா, வா’ என்று பரணி ஹாலுக்கு இழுத்துக் கொண்டு போனாள். எல்லோரும் பாட்டுப் பாட கேக் வெட்டி, நல்ல விருந்து சாப்பிட்டு முடித்துவிட்டு, அவள் தம்பியின் குடும்பமும் பெண்ணின் குடும்பமும் மட்டும் இருக்க, மற்றவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கிளம்பினார்கள்.

மாலையில் தைலாம்பாளும், சுந்தரும், பரணியும் மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பரணி கேட்டாள் ‘அம்மா, ஏன் என்னவோ போல இருக்க? உடம்பு கிடம்பு சரியில்லையா?’

‘ஆமா அக்கா நானும் கேக்கணும்னு நினைச்சேன். என்னாச்சு?’

தைலாம்பாளுக்குத் தயக்கமாக இருந்தாலும் மனதில் இருப்பதைச் சொல்ல ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தாள். உப்பே தொட்டு கற்பூரம் வரை எல்லாக் கதைகளையும் மகளிடம் பேசினாலும் பல மாதங்களாக ஒவ்வொரு முறையும் இவ்விஷயம் பேசுவதற்கு நா எழுந்து, பின் வழுக்கிக் கொண்டு போய் வேறு விஷயத்தில் நிற்கும். ஆனால் இப்போது இந்தக் கணத்தைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் வந்தது.

‘எனக்கு டைவர்ஸ் வேணும்.’

இறுக்கமான உதடுகளுடனும் தீர்க்கமான கண்களுடனும் அழுத்தமான குரலில் சொன்னாள் தைலாம்பாள். பரணியும் சுந்தரும் அசந்து போனார்கள்.

‘என்னம்மா சொல்ற?’

‘போறும் பரணி, என்னால் ஆகலை. சிறு பிராயத்துல விதவிதமா சாப்பிடணும்னு ஆசை வரும். அப்போல்லாம் பக்கத்து வீட்டுல அடுப்பெரிக்க விறகு வாங்குவா. அவா இருக்கப்பட்டவா. நம்ம வீட்டுல, ராட்டை செய்யும்போது விழற துண்டுகளை அப்பா கம்மி விலைக்கு வாங்கிண்டு வருவார் அடுப்பெரிக்க. வண்டிக்காரன் பக்கத்து வீட்டுக்கு விறகு கொண்டுவந்து போட்டால் நானும் சுந்தரும் குஷியாகி விடுவோம். விறகை சமையலறையில் கொண்டு போய் அடுக்கிக் கொடுத்தா ஒரு பிடி பொட்டுக்கடலை கொடுப்பா. அதிர்ஷ்டமிருந்தா சில நாள் வேர்க்கடலை கிடைக்கும்.’

‘ஞாபகமிருக்காடா சுந்தர்? எல்லாருக்கும் ஒரு கரண்டி சாம்பார்தான் கிடைக்கும். அப்பா ‘ஒரு கரண்டி சாம்பார்ல நன்னா கெட்டியா பிசைஞ்சுக்கோ. அப்பறம் கால் கரண்டி சாம்பார் தனியா அம்மா விட்டப்பறம் அதைத் தொட்டு சாப்பிடு. அப்போ நன்னா சாம்பார் சாதம் சாப்பிட்டதுபோல் ஆயிடும்’னு சொல்வாரே! அப்போ சாப்பாடு எவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தது. இப்பவும்தான். ஆனா வேற மாதிரி. விதவிதமா சாப்பிடணும்னு பகவானை வேரோட பிடுங்கி வேண்டிண்டேன் போல. அதனால் அதாலேயே இப்போ அடிச்சுப்பிட்டார். பரணி, வக்கீலுக்கு உன்னப் படிக்க வச்சதுக்கு ஒரு மகளா நீயே இந்த உதவிய எனக்குப் பண்ணிடு.’

‘அம்மா, உனக்கென்ன பைத்தியமா? எழுபது வயசாறது உனக்கு. எனக்கே நாப்பத்தியெட்டு. உன் பேரனுக்கு இருபத்தஞ்சு, ஊர் சிரிக்கும். இத்தன வயசுக்கப்றம் அப்பா என்ன செய்வா தனியா?’

‘இலைல எண்ணையத் தடவி தூக்கி எறியற வடம ஜம்பம்டீ அது. சித்த கூட கலங்காது. அவரைப் பார்த்துக்க ஆயிரம் பேர் வருவா.’

‘ஏன், உன்னோட அஷ்டசாஸ்திர அலுக்கு பிலுக்க நீ காட்டறியா? அத்திம்பேர் மாதிரி ஒரு மஹானை விட்டுட்டு போறேன்னு சொல்றியே, அதுவும் அம்பது வருஷத்துக்கு அப்றம், என்னதான் பண்ணினார் அவர்? வக்கணையா சமைச்சுப் போடுன்னு கேக்கறது ஒரு குத்தமா?’ என்று சுந்தர் சீறினான்.

“ஆமாம்மா, மாமா கேக்கறது சரி தான? என்னாச்சு உனக்கு?”

‘ஏன், நீ ஒரு நாளைப் போல பண்ணித்தான் பாரேன். மூணு வேளையும் கொஞ்சம் கூட அலுக்காம விதவிதமா… ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்ல, அம்பது வருஷம் வடிச்சுக் கொட்டியிருக்கேன் மூணு வேளையும். ஒரு நாள் ஓய்வில்ல. கல்யாணம் காட்சிக்கு வெளிய போய்ட்டு வந்தாலும் வீட்டுல சமைக்கற கொடுமையெல்லாம் ஆம்பிள அவனுக்கு புரியாதுன்னாக் கூட பரவால்ல, ஒரு க்ளாஸ் டீ வேணும்னாலும் ஸ்விக்கி பண்ற உன்னோட தலைமுறைக்குக் கூடவா புரியல பரணி?அடுக்களையைத் தவிர எனக்கு வேறெதுவுமே தெரியலைங்கறது தனக்குப் பெரிய அவமானம்னு கூடத் தெரியாத சுரணையற்ற ஜீவனோட இனி என்னால வாழ முடியாது. கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் கூட போகட்டும், பேய்க்கு வாழ்க்கைப் பட்டுட்டோம், புளியமரம் ஏறிடலாம்ன்னு தோணிருக்கும். ஆனா ஒரு நாள், ஒரே ஒரு நாள் நான் சுணக்கம் காட்டினால் போறும் அரைப்படி வெங்கலப்பானை மாதிரி முகத்தை வச்சிக்கும், இனி புளியமரம் ஏற திராணி இல்ல, ஆனா பிடுங்கு பட்டு சாகாம காப்பாத்திக்கலாம் இல்லையா?’

“அம்பது வருஷமா என்ன பண்ணின? இப்ப லேட் அக்கா…”

“அதாண்டா, லேட் அக்காவாறதுக்கு முன்னால கொஞ்சம் சுதாரிச்சுக்கப் பாக்கறேன்.”

‘அக்கா, ஊர் என்ன சொல்லும்னு நினைச்சுப் பாத்தியா?’ கெஞ்சினான் சுந்தர்.

‘ஊர் உதடு தேயத்தான் பேசும், என் உள்ளங்காலும் மனசும் தேயறது அவாளுக்குத் தெரியாது. ஊருக்கு அவர்தான் மஹானுபாவர். நான் பூதகியாவே இருந்துட்டுப் போறேன். ஒரு நா சாயந்திரம் பீச்சுக்கு பக்கத்து வீட்டு ப்ரியாவோட போயிட்டு வரேன்னு சொன்னா, ஃப்ளாஸ்க்ல காஃபி போட்டு வச்சுட்டுப் போன்னு சொன்னார். வந்து பார்த்தா காபி அப்படியே இருந்தது. முகம் குடுத்து ரெண்டு நாள் பேசல. கெஞ்சிக் கூத்தாடி கேட்டதுல, காபி ஆறிப் போய் இருந்துதாம். அது மட்டுமில்லாம அதோட ரெண்டு தவிட்டு பிஸ்கட் சாப்பிடுவாரே, அதையும் எடுத்து வச்சுட்டு போகலையாம். எனக்கு எதுக்கு இந்த எழவு ஆசைன்னு எங்கேயும் போகறதில்ல அதுக்கப்பறம்.”

‘நான் இயல்பிலேயே ரொம்ப சந்தோஷமானவடா. சாதத்தை மொய்க்கிற ஈயோடையும் சர்க்கரையைத் தேடி வர்ற எறும்போடையும் மட்டும் பேசியே என் வாழ்க்கை முடிஞ்சு போயிடுமோன்னு பயம் வந்துடுத்து. ‘தைலாக்குட்டி, கவர்மெண்ட் மாப்பிள்ளைடி, மட்டுமில்லாம வேதபாடம் அத்தனையும் கரைச்சு குடிச்சிருக்கார். ராஜியோட கல்யாணத்துல நீ கலகலன்னு ஓடியாடி வேலை செய்யறதப் பார்த்துட்டு அவராவே பொண்ணு கேட்டு வந்திருக்கார். இனி நீ ஆசைப்பட்டதுபோல நன்னா சாப்பிடலாம் குட்டி’னு பாவம் அப்பா சந்தோஷப்பட்டார். சர்க்கரைன்னு நினைச்சு என்னை உப்புல தள்ளினது தெரியாமலே போய் சேர்ந்துட்டார். எழுபது வயசு ஆயிடுத்துடா. எனக்கு கொஞ்சமே கொஞ்சமேனும் உலகம் பார்க்கணும்டா சுந்தர். இதோ இங்கிருக்கற அன்னபூர்னேஷ்வரி போகணும், முடிஞ்சா மானசரோவர் போகணும், காலாற பீச்சுல நடக்கணும். என் வயசுள்ள பொம்மனாட்டிகளை ஃப்ரண்ட் பண்ணிக்கணும்…நிறையப் படிக்கணும் எழுதணும்…இன்னும் எவ்வளவோ… மிஞ்சி மிஞ்சிப் போனா பத்து வருஷமா? அதுக்குள்ள வேகவேகமா ஒரு வாழ்க்கை வாழ்ந்துடறேனே…ப்ளீஸ்…’

‘தைலா…மூணு பேரும் கீழே வரேளா’ என்ற சுவாமிநாதனின் குரல் கேட்டது.

‘அம்மா, யோசிக்கலாம். இப்போ வா போவோம்.’ மூவரும் கீழே இறங்கினார்கள்.

‘தைலா, சமையல் மாமியோட சமையல் ஒண்ணும் சுகிக்கல. ஆறின ரசத்துல வெடிக்காத கடுகு தாளிச்சா மாதிரி ஒரு சமையல். மிச்சமிருக்கற எல்லாத்தையும் நம்ம பூங்காவனத்த எடுத்துண்டு போய் ஏழை பாழைகளுக்குச் கொடுக்கச் சொல்லு. எல்லாருக்கும் நீ அக்கி உசிலி பண்ணி, வெடிக்க விட்ட மோர்க் குழம்பு பண்ணிடு. அப்படியே தேங்காய் சட்னியும் அரைச்சுடு’ என்று பதிலை எதிர்பாராமல் சொல்லிவிட்டு அகன்றார்.

வெடுக்கென்று முகத்தைத் திருப்பி பெண்ணையும், சுந்தரையும் பார்த்தாள் தைலாம்பாள்.

*

5 thoughts on “பாதி கதை”

  1. இப்பவும் இதே மனநிலை உள்ள பல ஆண்கள் பணக்கார திமிர், அதிகார போதையிலும் வாழ்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

    இந்த மனநிலை ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரிவுகளிடம் மட்டுமே உள்ளது போல பார்க்கப்படுகிறது அது இன்று அனைத்து தரப்பான மக்களிடமும் மண்டி கிடைக்கின்றது.

  2. G.Sathishsaravanan

    ஐம்பது வருடங்களுக்கு முந்தைய மக்களின் மனநிலையை அழகாக பதிவு செய்தீர்கள் , வித விதமான உணவும் தனக்கு அடங்கிய மனைவியும் வாய்க்கப்பட்டதால் அவர் ஒரு மகாராஜா – சுவாமிநாத மகாராஜா. அறுவதிலும் ஆசை வரும் எழுவதிலும் கோவம் வரும் என்கிறாள் தைலாம்பாள் மாமி, குமுறும் இதயங்களின் கொந்தளிப்பை காலம் தான் சரி செய்யும்.

    பாதி கதை – ஒரு தொடர் கதை – மிக நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Gayathri R

Gayathri R